கொவிட்-19 கிருமித்தொற்று குறைந்து இருக்கும் வட்டாரங்களுடன் கூடிய தங்கள் எல்லைகளை எச்சரிக்கையுடன் அரசாங்கங்கள் திறந்துவிடும் பட்சத்தில் இந்த ஆண்டில் பாதுகாப்புடன் கூடிய சில விமானப் பயணங்கள் தொடங்கும் வாய்ப்புள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபெக்) வர்த்தக ஆலோசனை மன்றம் ஏற்பாடு செய்த எல்லைகள் திறப்பு பற்றிய மெய்நிகர் கலந்துரையாடலில் பேசிய அவர், தொற்று அதிகமாக இருக்கும் இடங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசி பலன் தருகிறது என்பதை வலியுறுத்திய அவர், இந்த ஆண்டில் விமானத் தொழில்துறை வேகமாக மீட்சியடைந்துவிடும் சாத்தியம் இல்லை என்றாலும் அந்தத் துறை மீட்சியடையத் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.
புதிய உருமாறிய கொவிட்-19 கிருமித்தொற்று மிரட்டலை எதிர்நோக்கும் நாடுகளுடன் எல்லை திறப்பு பற்றி பேசுவது இப்போது பொருத்தமானதாக இருக்காது என்பதை அமைச்சர் திரு ஓங் ஒப்புக்கொண்டார்.
இருந்தாலும் எல்லைகளைத் திறப்பது என்பது நாடுகளை, நகர்களை, தொழில்களை, மக்களை இணைப்பதற்கு அவசியமானது என்பதை அவர் வலியுறுத்தினார். இதுவே மானிட இனத்தின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
விமான மையங்களாகவும் அனைத்துலக நிதிச் சேவைமையங்களாகவும் இருந்து வரும் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் அந்தப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வர வேண்டுமானால் அவற்றின் விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருப்பதை அமைச்சர் சுட்டினார்.
ஹாங்காங்கும் சிங்கப்பூரும் மே 26ல் இரு தரப்பு பயண ஏற்பாடு தொடங்கும் என்று அறிவித்து உள்ளன.
எல்லைகளைப் பாதுகாப்பாகத் திறந்துவிடுவதற்குத் தேவைப்படும் நான்கு முக்கிய நடவடிக்கைகளையும் திரு ஓங் கோடி காட்டினார்.
கொவிட்-19 கிருமியை வெற்றி கரமான முறையில் கட்டுப்படுத்தி இருக்கும் நாடுகளுக்கு மட்டும் எல்லைகளைத் திறப்பது, கொரோனா பரிசோதனைகளை நடத்துவது, தடுப்பூசி, பயணிகள் மூலம் கிருமி பரவுவதைத் தடுக்கும் பரஸ்பர பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை அந்த நான்கு நடவடிக்கைகள் என்றாரவர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய ஹாங்காங்கின் வர்த்தகப் பொருளியல் மேம்பாட்டுத் துறை பிரமுகர் எட்வர்ட் யாவ், எல்லைகளைத் திறப்பதில் அரசாங்கங்கள் அறிவியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
"தலைசிறந்த ஒன்றுக்காக திட்டமிட வேண்டும். மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்த்து அதற்கு தயாராகவும் இருக்க வேண்டும்.
"பிரச்சினைகள் வரும்போது ஊக்கம் குறைந்து போய்விடக் கூடாது. அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்," என்று திரு யாவ் வலி யுறுத்திக் கூறினார்.
கலந்துரையாடலுக்குப் பிறகு குழு விவாதிப்புகள் இடம்பெற்றன.
பல்வேறு எல்லைகளுக்கு இடையில் முரணற்ற பயண நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த ஒன்றாகச் சேர்ந்து நாடுகள் செயல்பட வேண்டும் என்று அதில் குரல் எழுப்பப்பட்டது.