கோலாலம்பூர்: கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதால் நாடுதழுவிய முடக்கநிலையை பிரகடனம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
மலேசியா முழுவதிலும் நாளை முதல் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடப்பில் இருக்கும் என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று அறிவித்தார்.
மலேசியாவில் கொரோனா தலைதூக்கியதிலிருந்து நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே மூன்றாவது முறையாகும்.
தற்போது விதிக்கப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மிகக் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பொருளியல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்றார் திரு முகைதீன்.
ஆனால் சமூக நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், உணவகங்களில் சாப்பிடுவது, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
வேலை, அவசரநிலை, மருத்துவச் சேவை, கணவன் அல்லது மனைவியைப் பார்க்கச் செல்வது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவற்றுக்கு மட்டுமே வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் செய்யலாம்.
புதிய உத்தரவின்கீழ் குறிப்பிட்ட சில வெளிப்புற உடற்பயிற்சி
களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றார் பிரதமர் முகைதீன்.
இந்நிலையில், கொவிட்-19
கிருமிப் பரவலைத் தடுக்க மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாவட்ட, மாநிலங்களுக்கிடையிலான பயணத் தடையை மீற
ஆயிரக்கணக்கானோர் முயன்றனர்.
மலேசிய, இந்தோனீசிய போலிசார் விழிப்புடன் இருந்து சாலைகளில் தடுப்புகளை அமைத்து நோன்புப் பெருநாளைக் காரணம் காட்டி பயணத் தடையை மீற முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
மலேசியாவில் வேறு மாவட்டங்கள், மாநிலங்களை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த வாகனங்களுக்கு போலிசார் அனுமதி மறுத்து திருப்பிவிட்டனர்.
வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் ஆகியவற்றில் இருக்கும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு
நோன்புப் பெருநாள் பலகாரங்கள், புத்தாடைகள் கொடுக்க அங்கு செல்வதாகப் பலர் கூறினர். ஆனால் இதற்கு போலிசார் கொஞ்சம்கூட அசரவில்லை. மலேசியாவில் அன்றாட கொவிட்-19 பாதிப்பு 3,000க்கும் 5,000க்கும் இடையே பதிவாகி வருகிறது.
கடைத்தொகுதிகளிலும் நோன்புப் பெருநாள் சந்தைகளிலும் தொடர்ந்து கூட்டம் அலைமோதினால் இம்மாதம் இறுதிக்குள் அன்றாட பாதிப்பு 7,000ஆக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மலேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நிலவரப்படி மலேசியாவில் மேலும் 26 பேர் கொவிட்-19 காரணமாக மாண்டனர்.
மேலும் 3,733 பேருக்குக்
கிருமித்தொற்று ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்தோனீசியாவில் பயணத் தடையை மீறி வேறு மாநிலங்களுக்குள் நுழைய முயன்ற 70,000க்கும் அதிகமான வாகனங்களை அந்நாட்டு போலிசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து திருப்பிவிட்டனர். ஏறத்தாழ 155,000 போலிஸ், ராணுவ, போக்குவரத்து அதிகாரிகள் சாலைகளில் தடுப்புகளை அமைத்து அவ்வழியாகச் செல்லும் வாகனங்களைச் சோதனை
யிட்டனர்.
மேற்கு ஜாவாவில் மட்டும் பயணத் தடையை மீற முயன்ற கிட்டத்தட்ட 36,000 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் திருப்பிவிட்டனர்.