தந்தையைத் தாக்கி, காயப்படுத்தியதாகக் கூறி 21 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
'கூரிய கருவி' கொண்டு தமது 41 வயது தந்தையை வேண்டுமென்றே தாக்கி, காயம் விளைவித்த குற்றச்சாட்டை பிரசாந்த் சரவணன் எனும் அந்த இளையர் எதிர்நோக்குகிறார்.
கிம் மோ லிங், புளோக் 26க்கும் 27க்கும் இடையிலான நடைபாதையில் கடந்த திங்கட்கிழமை இரவு 11.23 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பிரசாந்த் மீது மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறி, சிறைச்சாலையின் கட்டாய பின்கவனிப்புத் திட்ட விதிமுறையை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரசாந்துக்குப் பிணை வழங்கப்படவில்லை. அவரைத் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் மீதான வழக்கு பின்னர் விசாரணைக்கு வரும்போது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தம் மகனால் 41 வயது ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் காயம் அடைந்த அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நேற்றுக் காலையில் போலிஸ் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு போலிஸ் செல்லுமுன் அவரின் மகன் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார். தந்தை-மகனுக்கு இடையே முன்னதாகவே பிரச்சினை இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை மற்றும் போலிஸ் படக்கருவிகளில் பதிவான படங்களின் துணையுடன் கிளமெண்டி, ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள், குற்றம் நிகழ்ந்த நான்கு மணி நேரத்திற்குள் சந்தேகப் பேர்வழியைப் பிடித்துவிட்டனர்.
ஆபத்தான முறையில் வேண்டுமென்றே தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் பிரசாந்துக்கு ஏழாண்டு வரை சிறையும் அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.