நேரலையில் குருவுடனும் ஏனையோருடனும் இணைந்து பிரார்த்தனையுடன் நேற்று விசாக தினத்தைத் தொடங்கினார் எம் சத்யநாராயணன், 47.
“பௌத்த ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது, கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது, தொண்டூழியங்களில் ஈடுபடுவது என்று விசாக தினம் வழக்கமான கொண்டாட்ட நாளாக இருக்கும். ஆனால், கொவிட்-19 சூழல் காரணமாக மிக அமைதியான முறையில் விசாக தினத்தைக் கொண்டாடினேன்,” என்று அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
2012ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த பின்னர் திபெத்திய பௌத்த சமய நம்பிக்கையைப் பின்பற்றத் தொடங்கினார் சத்யநாராயணன்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமக்கு திபெத்திய நம்பிக்கையின் போதனைகளும் தியானங்களும் அதிலிருந்து மீண்டுவர உதவியதாகக் கூறினார் அவர்.
நிதி, முதலீட்டு ஆலோசகராகப் பணிபுரியும் அவர், தமது குடும்பத்தினருக்கும் தியானம் மன அமைதியையும் நிம்மதியையும் தருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் சிங்கப்பூரில் எந்த உறவுகளும் இல்லாத தமக்கு சக சீடர்கள் குடும்பத்தினர்போல ஆதரவு காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர் இப்படி என்றால் ராஜு குடும்பத்தினர் ஈராண்டுகளாக தங்களது வீட்டிலேயே விசாக தின வழிபாட்டை நடத்துகிறார்கள்.
“விசாக தினத்தில் வழக்கமாக பௌத்த ஆலயத்துக்குச் செல்வோம். அக்கம்பக்கத்தாருக்கு சைவ உணவு வாங்கித் தருவோம்.
“இந்த ஆண்டு வீட்டிலேயே வழிபாடு செய்தோம். இணையத்தில் உணவு வாங்கி அண்டை வீட்டாருக்கு வழங்கினோம்,” என்றார் பானு ராஜு, 25.
கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக பௌத்த சமய போதனைகளைக் கடைப்பிடித்து வரும் காப்புறுதி நிபுணரும் உள்ளூர் தொலைக்காட்சி பாடகருமான மோகன் ராமகிருஷ்ணன், 53, இந்நாள் மனித குலத்திற்குப் பொன்னாள் என்
கிறார். பௌத்த சமயத்திலேயே ‘சோக்கா’ என பரவலாக அழைக்கப்படும் நிச்சிரன் பௌத்த பிரிவைச் சேர்ந்த இவர், இந்த நாளுக்கென்று தனிப்பட்ட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில்லை.
கௌதம புத்தர் பெருமானை நினைவில் கொள்வதற்காக ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதோடு போதிக்கப்பட்ட நெறிமுறைகளை வாழ்க்கைமுறையுடன் இணைத்துக்கொள்வதே சாலச் சிறந்தது என்று பதினைந்து வயது முதல் இச்சமயத்தைப் பின்பற்றிவரும் திரு மோகன் கூறுகிறார்.
1972ஆம் ஆண்டில் சங்கப் பதிவகங்களில் இடம்பெற்ற சிங்கப்பூர் சோக்கா சங்கம், சமூகப் பிணைப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு பங்களித்து வருகிறது.
தமது முப்பதாவது வயது முதல் சிறுநீரகச் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிரமங்களை உணர்ந்தபோதுதான் நிச்சிரன் பௌத்த வழிமுறைகளின் மூலம் தமது மனதை மேலும் ஒருமுகப்
படுத்தி கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை மேற்கொண்டதாக திரு மோகன் கூறினார்.