கோலாலம்பூர்: மலேசியாவின் கொவிட்-19 தடுப்பூசி உத்தி, பல குறைகூறல்களுக்குப் பின்னர் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மாபெரும் தடுப்பூசி நிலையங்கள் நகரப் பகுதிகளில் திறக்கப்பட்டாலும் கிராமப்புற மக்கள் அவற்றை நாடுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது.
வயது மூத்தவர்கள் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நீண்டதூரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்ததாகக் கடந்த வாரம் செய்திகள் பரவின.
கிளந்தானைச் சேர்ந்த 90 வயது கான் கியோக் ஹியாங், தமது தடுப்பூசியைப் பெற குபாங் கெரியான் என்னும் பகுதிக்குச் செல்ல நேரிட்டது.
இது அவர் வசிக்கும் பகுதியான ரண்டாவ் பாஞ்சாங்கில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது.
அந்த மூதாட்டியை சையது ஹசன் சையது பக்கார் என்னும் அவரது அண்டை வீட்டார் அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.இதுபோன்ற பல சம்பவங்கள் பற்றி தகவல்கள் வந்துள்ளன.
இது தவிர, மாபெரும் தடுப்பூசி நிலையங்களில் பெருங்கூட்டம் காணப்படுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய மலேசிய பொது சுகாதார மருத்துவர் சங்கத் தலைவர் ஸைனல் ஆரிஃபின் ஓமர், “சிறப்பாகவும் வேகமாகவும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாபெரும் தடுப்பூசி நிலையம் என்னும் அணுகுமுறை போதுமானதாக இல்லை,” என்றார்.
சிறிய தடுப்பூசி நிலையங்கள், நடமாடும் நிலையங்கள், நேரடியாகச் சென்று தடுப்பூசி பெறும் முறை போன்றவற்றை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, கிராமப்புறங்கள், மக்கள் நெருக்கமான வீடமைப்புப் பகுதிகள், குறைந்த விலை வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கு இவை அவசியம்,” என்றார் அவர்.