சிங்கப்பூரின் மக்கள்தொகை வளர்ச்சி சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. அதே காலகட்டத்தில் ஒற்றையர் எண்ணிக்கை கூடிவிட்டது.
திருமணம் செய்துகொண்டோர் பெற்றுக்கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கையும் முன்னிலும் குறைவாக இருக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2010 முதல் 2020 வரைப்பட்ட பத்து ஆண்டுகளுக்கான நாட்டின் 6வது மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் இவை அடங்கி இருக்கின்றன.
எல்லா இன, எல்லா வயது சிங்கப்பூரர்களும் முன்னிலும் சிறப்பாக கல்வி கற்றவர்களாக ஆகி இருக்கிறார்கள்.
சமயம் சாராதவர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது.
சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகை 2010ல் 5.077 மில்லியன். இது 2020ல் 5.686 மில்லியனாகக் கூடி இருக்கிறது. மொத்த மக்கள்தொகை ஆண்டுக்கு 1.1% அதிகரித்துள்ளது. இது சுதந்திரம் பெற்றது முதல் ஆகக் குறைான அளவாகும்.
குடிமக்கள் எண்ணிக்கை 3.23 மில்லியனில் இருந்து 3.52 மில்லியனாகியது. நிரந்தரவாசிகள் எண்ணிக்கை ஏறத்தாழ 0.5 மில்லியனாகவே இருக்கிறது. சென்ற ஆண்டு மக்களில் 15.2 விழுக்காட்டினர் 65 அதற்கும் அதிக வயதானவர்கள்.
இது 2010ல் 9% ஆக இருந்தது. சராசரி வயது 37.4லிருந்து 41.5 ஆகக் கூடி உள்ளது. ஒற்றையர் எண்ணிக்கை கூடி உள்ளது. 25 முதல் 34 வரை வயதுள்ள ஒற்றையர் எண்ணிக்கை ஆக அதிகமாக கூடி இருக்கிறது. 25 முதல் 29 வரை வயதுள்ளவர்களில் ஒற்றை ஆடவர் விகிதம் 81.6% ஆகியது. பெண்களில் இந்த விகிதம் 69% ஆகக் கூடியது.
ஒற்றையர்களில் குறைந்த கல்வி கற்ற ஆடவர்கள் அதிகம். பெண்களில் இது நேர் மாறாக இருக்கிறது.
மணமானவர்கள் குறைவாகவே பிள்ளை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக அதிகம் கல்வி கற்ற பெண்கள் குறைவாக பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர்.
சிங்கப்பூர் வாசியான 40 முதல் 49 வரை வயதுள்ள ஒரு பெண்ணுக்குப் பிறந்த பிள்ளைகள் சராசரி எண்ணிக்கை 2010ல் 2.02 ஆக இருந்தது. இது 2020ல் 1.76 ஆகக் குறைந்தது. இந்த வயதுப் பிரிவினரில் பல்கலைக்கழக பட்டதாரிகளிடையே இந்த விகிதம் சென்ற ஆண்டில் 1.66 பிள்ளைகளாக இருந்தது.
பிள்ளை இல்லாதவர்கள் விகிதம் 2020ல் 13.5% ஆகக் கூடியது.
சிங்கப்பூரர்கள் முன்னிலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். 25 அதற்கும் அதிகவயதுள்ளவர்களில் 10 பேரில் ஏறக்குறைய ஆறு பேர் உயர்நிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி அல்லது உயர் கல்வி கற்றவர்கள்.
இதில் சீனம், மலாய், இந்திய சமூகங்கள் அனைத்திலும் மேம்பாடு இருக்கிறது. ஒட்டுமொத்த கல்வி அறிவு அதிகமாகி உள்ளது.
வீடுகளில் ஆங்கிலம் அதிகம் பேசுவது கூடி இருக்கிறது. ஐந்து, அதற்கும் அதிக வயதுள்ளவர்களில் இந்த விகிதாச்சாரம் சென்ற ஆண்டில் 48.3% ஆகக் கூடியது. 2010ல் இந்த அளவு 32.2%தான்.
சமயம் சாராதவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். 15, அதற்கும் அதிக வயதுள்ளவர்களில் 31.1% பௌத்தர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டனர். 8.8% தாவோயிஸ்டுகள்; 18.9% கிறிஸ்துவர்கள்; 15.6% முஸ்லிம்கள்; 5% இந்துக்கள்.
தாங்கள் எந்த சமயத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என்று தெரிவித்த சிங்கப்பூரர்கள் விகிதம் சென்ற ஆண்டில் 20%.
இது 2010ல் 17% ஆக இருந்தது. எல்லா வயதுப் பிரிவினரிடத்திலும் இந்த நிலை காணப்படுவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.