பாலஸ்டியர் ரோட்டில் நடந்த தகராற்றுக்குப் பின்னர், தகவல் அறிந்து வந்த போலிசாரை வசைபாடி முரண்டுபிடித்த 27 வயது ஆடவர் கைதானார். எண் 230 பாலஸ்டியர் ரோட்டில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு 2.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.
குடித்துவிட்டு பொது இடத்தில் தொல்லை தந்தது, அரசாங்க அதிகாரிக்கு எதிராக வசைச் சொற்களைப் பயன்படுத்தியது, கடமையை ஆற்ற முயன்ற அரசாங்க அதிகாரி மீது வன்முறையைப் பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
குடித்துவிட்டு கார் ஓட்டியதன் தொடர்பிலும் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலிசாரை ஆடவர் வசைபாடி சவால் விடுப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதாக ஸ்டோம்ப் இணைய செய்தித்தளம் கூறியது.