சமூகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நாளை முதல் மீண்டும் கடுமையாக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் மீண்டும் இரண்டாம் கட்ட (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) கட்டுப்பாடுகளை நாளை (ஜூலை 22) முதல் அறிமுகம் செய்கிறது. இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 18 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது தற்காலிக மாக தடைசெய்யப்படுவதாக வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் உணவு விநியோகமும் வாடிக்கையாளர்கள் உணவு வாங்கிச் செல்வதும் தொடரும் என்றார் அவர். இருவர் மட்டும் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது இன்றுடன் நிறுத்தப்படுகிறது. சமூக ஒன்றுகூடல்களில் இருவருக்கு மேல் ஒரு குழுவில் இருக்கக்கூடாது என்பது மற்றொரு கட்டுப்பாடு. அதேபோல வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு இரு தனிப்பட்ட வருகையாளர்கள் மட்டுமே செல்ல வேண்டும். தற்போது அந்த எண்ணிக்கை ஐந்தாக உள்ளது.
சிங்கப்பூரில் கொள்ளைநோய் பரவத் தொடங்கியதற்குப் பிறகு ஆக அதிக அளவிலான தொற்றுச் சம்பவங்கள் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகப் பதிவானதைத் தொடர்ந்து கொவிட்-19க் கான அமைச்சுகள்நிலை பணிக்குழு கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி உள்ளது.
திங்கட்கிழமை உள்ளூரில் 163 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. அவற்றுள் பெரும்பாலானவை ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவை. அந்தக் குழுமத்துடன் ஈரச்சந்தைகள், உணவங்காடி நிலையங்கள் போன்றவை தொடர்புடைய மேலும் சில தொற்றுக் குழுமங்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
"இது மிகவும் கவலைக்குரியது. இந்தத் தொற்றுப் பரவல் தீவு முழுவதும் நமது சமூகத்தில் பலரையும் பாதிக்கக்கூடியது," என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. தற்போதைய புதிய கட்டுப்பாடுகள் ஏற்கெனவே கடந்த மே மாதம் சாங்கி விமானநிலைய குழுமம் உருவானபோது நடப்பில் இருந்தன. தற்போது மீண்டும் பழைய கட்டுப்பாட்டு நிலைக்குச் செல்வது பெரியதொரு பின்னடைவு என்று பணிக்குழு தெரிவித்தது.
தேசிய தினத்திற்குள் மூன்றில் இரு பகுதி மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடவேண்டும் என்னும் இலக்கை அடைவதற்குப் போதுமான கால அவகாசத்தைப் பெறும் நோக்குடன் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக பணிக்குழுவின் இணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அந்த நிலையை அடைந்துவிட்டால் நாள் ஒன்றுக்கு 100 அல்லது 200 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவானாலும் பாதுகாப்பாக இருக்கும் நம்பிக்கையை சிங்கப்பூர் பெறும் என்றார் அவர்.
"எனவேதான், நீண்ட, தீவிர யோசனைக்குப் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் தடுப்பூசி இலக்கை நாம் அடைந்து விட்டால் அதன் பின்னர் மேலும் உறுதிமிக்க மீட்சியை நோக்கிய மாற்றத்திற்கு நாம் தயாராக முடியும்.
"தற்போதைய நிலைமையைச் சிரமப்பட்டு சமாளித்தாக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சமூக நடவடிக்கைகளில் பழைய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டியுள்ளது. இந்த நேரத்தை தடுப்பூசி போட்டுக்கொளும் முயற்சி
களுக்கு மக்கள் பயன்படுத்த வேண்டும்," என்றார் திரு ஓங்.