மேட்டுப்பாளையம்: தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியாக உயர்ந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை கருத்தில் கொண்டு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர் கிராம அதிகாரிகள்.
இந்நிலையில் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அங்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.