கோலாலம்பூர்: மலேசியாவின் நாடாளுமன்றம் இவ்வாண்டு முதல்முறையாக இன்று கூடுகிறது.
இருப்பினும், இந்த ஐந்து நாள் சிறப்பு அமர்வு பலன் தரும் என்ற நம்பிக்கை மலேசியர்கள் பலருக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவை உலுக்கிவரும் கொவிட்-19 நெருக்கடிநிலை,
நலிவுற்றிருக்கும் பொருளியல் ஆகியவை தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாது என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலை மோசமடைந்து வருவதால்
மாமன்னர் அப்துல்லா அகமது ஷா நெருக்குதல் தந்த பிறகு,
நாடாளுமன்றத்தைக் கூட்ட மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் இம்மாதம் இணக்கம் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையை எதிர்கொள்வதாகக் கூறி, மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இருப்பினும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இன்று தொடங்கும் ஐந்து நாள் அமர்வில் விவாதங்கள் நடை
பெறுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. அமைச்சர்நிலை கேள்வி-பதில் நேரம், மசோதாக்களை சட்டமாக்க நடத்தப்படும் வாக்கெடுப்புகள் ஆகியவை நடைபெறாது என்று கூறப்
படுகிறது.
இதனால் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பிரதமர் முகைதீனுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம்
நிலவுகின்றபோதிலும் அவரது
பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
அவருக்கு எதிராக நம்பிக்கைஇல்லா வாக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம் மிகவும் குறைவு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு எதிராக மலேசியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குத் தலைமைதாங்கும் பல மூத்த அமைச்சர்கள் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 அவசரகாலச் சட்டங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசரநிலையின்போது இவை நடைமுறைப்படுத்தப்பட்டதால் இவை குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படாது.
தேசிய மீட்சித் திட்டம் குறித்து திரு முகைதீன் இன்று பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையிலிருந்து மீண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரநிலை அடுத்த மாதம் 1ஆம் தேதியுடன்
முடிவடைய இருக்கிறது.