கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்து வந்துள்ளன. இன்னும் சில காலத்திற்குக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்துவரும் எரிசக்தி விலை, மொத்த விற்பனைச் சந்தை சூடுபிடிப்பது போன்ற காரணங்களால் மின்சாரச் சேவைகளை வழங்கும் சில்லறை வர்த்தகர்கள் கட்டணத்தை உயர்த்துவதாக இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் கவனிப்பாளர்களும் கூறுகின்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மின்சாரச் சேவைத் திட்டங்களுக்கு இது பொருந்தும்.
பல பயனீட்டாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவை ஏற்படாத வகையில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், திட்டங்கள் நிறைவுக்கு வந்த பிறகு கட்டணம் அதிகரிக்கக்கூடும்.இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துவருவதால் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான விலை கூடியுள்ளதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் அதன் எரிசக்தி தேவைகளில் 95 விழுக்காட்டிற்கு இயற்கை எரிவாயுவைச் சார்ந்திருக்கிறது.
மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் இயற்கை எரிவாயுவைப் பெறுகிறது, திரவ இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது.
கடந்த ஜூலை மாதம் இருந்ததுடன் ஒப்பிடுகையில் மின்சார சில்லறை வர்த்தகர்கள் இம்மாதம் நிர்ணயிக்கப்பட்ட மின்சாரச் சேவைத் திட்டங்களின் விலையை 10லிருந்து 20 விழுக்காடு உயர்த்திஉள்ளனர்.
ஏற்கெனவே இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்த பெரும்பாலோர் விலை உயர்வால் இதுவரை பாதிக்கப்படவில்லை. ஆனால் ஒப்பந்தம் நிறைவடையும்போது மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும். அப்போது விலை அதிகரிக்கலாம் என்பதைப் பயனீட்டாளர்கள் அறிகின்றனர்.