திருத்துறைப்பூண்டி: அரசுப் புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக 'போர்' போட்டு, தண்ணீரை லாரியில் பிடித்துச் சென்று, வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த ஆடவர்கள் குறித்து காவல்நிலையத்தில் அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, வீட்டில் இருந்து வெளியே வந்த சுரேஷ்குமார் மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டுச் சாணத்தை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுரேஷ்குமார் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுரேஷ்குமாரின் தங்கையும் லாரி முன் படுத்துக்கொண்டு நியாயம் கோரி மறியல் செய்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வரும் சுரேஷ்குமார், தண்ணீர் ஏற்றி வந்த லாரியை மடக்கி போலிசில் ஒப்படைத்தார்.
இதனால் எரிச்சலடைந்த சந்தேக நபர்கள், சுரேஷ்குமார் மீது மாட்டுச் சாணத்தை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.