பேங்காக்: நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து பேங்காக் மற்றும் ஒன்பது வட்டாரங்களுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயத் தனிமையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தியுள்ள அரசாங்கம், நாட்டின் சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
சியாங் மாய், பங்கங்கா, கிராபி, ஹுவா ஹின், பட்டாயா, மற்றும் சா-ஆம் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா வட்டாரங்கள் வெளிநாட்டவர்களுக்குத் திறக்கப்படுகின்றன.
கடந்த ஜூலை மாதம் முன்னோட்டத் திட்டமாக புக்கெட், சாமுய் தீவுகள் திறக்கப்பட்டன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மற்ற வட்டாரங்களும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறையை தாய்லாந்து பெரிதும் நம்பியுள்ளது.
ஆனால் பதினெட்டு மாதக் கடுமையான நுழைவுக் கட்டுப்பாடு களால் அத்துறை பொலிவிழந்து காணப்படுகிறது.
2019ல் மட்டும் 40 மில்லியன் பயணிகள் தாய்லாந்துக்கு வந்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டுப் பயணிகளை மீண்டும் வரவேற்க தாய்லாந்து ஆர்வமுடன் உள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வருகையாளர் களுக்கான தனிமைக்காலத்தையும் அதிகாரிகள் குறைத்துள்ளனர்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏழு நாட்களாகவும் தடுப்பூசி போடாதவர்களுக்கு பத்து நாட் களாகவும் குறைக்கப்படும் என்று நாட்டின் கொவிட்-19 பணிக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.