ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீட்டின் படுக்கை அறை ஒன்றில் தீ பிடித்ததை ஆடுத்து ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது.
முதல் கட்ட விசாரணையில் தனிநபர் நடமாட்டச் சாதனத்திலிருந்து (பிஎம்டி) தீ மூண்டதாகத் தெரியவந்துள்ளது.
ஜூரோங் வெஸ்ட் புளோக் 978ல் ஐந்தாம் மாடியில் ஏற்பட்ட தீச் சம்பவம் குறித்த தகவல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்று அதிகாலை 2.25 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வீட்டின் வெளிப்புறத்தின் விளிம்பில் இருவர் காணப்பட்டனர். தீயணைப்பாளர்கள் படுக்கையறைக்குள் பலவந்தமாக நுழைந்து அவர்களைக் காப்பாற்றினர். பக்கத்து அறையில் மூண்ட தீ, நீர் பாய்ச்சி அணைக்கப்பட்டது.
தீ பற்றிய அறையில் 22 வயது ஆடவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார் என போலிசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அங்கு வருவதற்குள் 24 வயது ஆடவர் ஒருவர் அவ்வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, தீக் காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் போலிசார் தெரிவித்தனர்.
மேலும், அக்கம் பக்கத்திலிருந்த வீடுகளிலிருந்த கிட்டத்தட்ட 60 குடியிருப்பாளர்களை போலிசார் வெளியேற்றினர்.
துணை மருத்துவ ஊழியர்களின் சேவை இரண்டு தீயணைப்பாளர்களுக்குத் தேவைப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாளுவது என்பது குறித்தும் இதுபோன்ற தீச்சம்பவங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல்களைப் பதிவிட்டுள்ளது.
யுஎல்2272 பிஎம்டி ரகம் அல்லாத சாதனங்கள், தீப் பற்றக்கூடியவை என்றும் மறுபயனீட்டாளர்களிடம் அவற்றைக் கொடுத்து அப்புறப்படுத்துமாறும் அது கேட்டுக்கொண்டது.
வெஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான திரு ஆங் வெய் நெங் சம்பவ இடத்துக்கு நேற்று காலை சென்றிருந்ததாகத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.