பாவை சிவக்குமார்
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலால் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் அசெளகரியம் ஏற்பட்டுள்ளது. எப்படி படிப்பைத் தொடரப் போகிறோம் என்ற ஐயங்களும் சிலரிடையே நிலவத் தொடங்கியது.
'கவலை வேண்டாம், உங்கள் படிப்புக்குத் துணையாக நான் இருக்கிறேன்' என்று கூறித் தம் மாணவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளித்து வருகிறார் தொழில்நுட்பக் கல்விக் கழக (கிழக்கு கல்லூரி) விரிவுரையாளர் 37 வயது தினேஷ் துளசிதரன்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் துறையில் பட்டயக்கல்வி முடித்துவிட்டு, தமக்குப் பிடித்த பணியில் இருக்க வேண்டும் என்பதற்காக உடலுறுதித் துறையில் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார்.
விளையாட்டு அறிவியலிலும் மேற்படிப்பு மேற்கொண்டுள்ளார்.
மற்ற உடலுறுதி பயிற்றுவிப்பாளர்களுக்கும் இவர் பயிற்சி வழங்கியுள்ளார்.
எதிர்கால உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் தமது 29வது வயதில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உடலுறுதிப் பயிற்சி அளிக்கும் விரிவுரையாளர் பணியில் இணைந்தார்.
விளையாட்டு நிர்வாகம் மற்றும் வர்த்தகச் சேவைத் துறைகள் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தரும் இவர், மாணவர்களின் வேலைப் பயிற்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார்.
"கொவிட்-19 காலம் தொடங்கியதிலிருந்து மாணவர்கள் மன நலப் பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றனர். நேரடியாக அவர்களைச் சந்திக்க முடியாத நிலையில் தொலைபேசி வழி அவர்களுடன் தொடர்புகொண்டு நலம் விசாரித்து, அறிவுரை வழங்கினேன்.
"இதனால் தங்களுக்கு உதவ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு வந்துவிடுகிறது," என்று கூறினார் தினேஷ்.
கற்றல் தளங்களில் மெய்நிகர் வகுப்புகள் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஆய்வு மேற்கொள்ள சொல்லி, அதைச் சக மாணவர்கள் முன்னிலையில் படைக்கவும் செய்தார் தினேஷ்.
மாணவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றதுடன் சிலர் புதிர்ப்போட்டிகளையும் அதன் தொடர்பான இணைய விளையாட்டுகளையும் உருவாக்கவும் முனைந்தனர்.
கடந்தாண்டு கொவிட்-19 சூழ்நிலையால் நேரடி விளையாட்டு வகுப்புகள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன.
சக பணியாளர்களுடன் தினேஷ் இணைந்து மூன்று மாதங்களில் ஒரு செயலியை உருவாக்கினார். மாணவர்களை உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ய இச்செயலி பேருதவியாக இருந்தது.
படிப்பில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. அடக்கமுடைமை, மரியாதை, சேவை மனப்பான்மையுடன் பேசத் தெரிவது போன்ற பண்புகளை மாணவர்களிடத்தில் வளர்ப்பதும் ஒரு மாணவரின் முழுமையான கல்விப் பயணத்தில் அடங்கும் என்பதை அறிந்து அதை நோக்கி தினேஷ் தம் பங்கை ஆற்றி வருகிறார்.
சிறப்புத் தேவைகள் தொடர்பான விளக்க வகுப்புகளையும் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தினேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நண்பராகவும் விளங்கும் இவருக்கு, இவ்வாண்டின் தொழில்நுட்பக் கல்விக் கழக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
"வெற்றி அடைந்தால் செருக்குடன் இருக்காதே. தோல்வி அடைந்தால் துவண்டுவிடாதே" என்பதை அடிக்கடி தன் மாணவர்களுக்கு நினைவூட்டுவதாகச் சொல்கிறார் இந்த ஆசான்.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக தற்போது தேசிய கல்விக் கழகத்தில் பயிற்சி, மேம்பாடு சார்ந்த நிபுணத்துவ கல்வி முதுகலை மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.