மெக்கா பள்ளிவாசலில் சமூக இடைவெளி விதி நீக்கம்
மெக்கா: முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் (அல் ஹரம்) சமூக இடைவெளி விதிமுறை நீக்கப்பட்டது. இதனையடுத்து, கொவிட்-19 பரவலுக்குப்பின் முதன்முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏராளமானோர் தோளோடு தோள் நின்று வழிபாடு செய்தனர்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தளர்த்துவது, பெரிய பள்ளிவாசலில் முழுக் கொள்ளளவுடன் வழிபாட்டாளர்களையும் வருகையாளர்களையும் அனுமதிப்பது ஆகிய முடிவுகளை ஒட்டி, சமூக இடைவெளி விதி அகற்றப்படுகிறது,” என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், வருகையாளர்கள் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டியதும் பள்ளிவாசல் பகுதியில் இருக்கும்போது முகக்கவசம் அணிந்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள ‘காபா’விற்கு அருகே யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்ரா யாத்திரை வர அனுமதிக்கப்படுவர் என்று கடந்த ஆகஸ்ட்டில் சவூதி அரசாங்கம் அறிவித்திருந்தது.