கம்பத்து வாழ்க்கையை செங்குத்தான கட்டட வடிவில் மூத்த குடிமக்கள் அனுபவிப்பதற்காக கிட்டத்தட்ட 70 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் இயூ டீ வட்டாரத்தில் கட்டப்படும். இவ்வீடுகள், அடுத்த மாத ‘பிடிஓ’ விற்பனைத் திட்டத்தின் கீழ் இடம்பெறும் என்று வீவக தெரிவித்தது.
‘இயூ டீ ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம்’ என்று தற்போது இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு சுவா சூ காங் வட்டாரத்தின் முதல் உணவங்காடி நிலையம், பலதுறை மருந்தகம், சமூக மன்றம், ரத்த சுத்திகரிப்பு நிலையம், சமூக நடவடிக்கைகளுக்கான வளாகம், சில்லறை வர்த்தகக் கடைகள் ஆகியவற்றையும் இந்தத் திட்டம் கொண்டிருக்கும்.
பத்து மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் மொத்தம் 68 ஈரறை வீடுகள் அமைந்திருக்கும். இவை 36 அல்லது 46 சதுர மீட்டர் அளவில் இருக்கும். 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் மட்டுமே இவ்வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மூத்தோருக்கு ஏதுவான வசதிகள் பொருத்தப்பட்ட நிலையில் வீடுகள் இருக்கும்.
அத்துடன் அறிவார்ந்த இல்லத்துக்கான தீர்வுகளைக் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தவும் தங்களின் எரிசக்திப் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் வீடுகளில் அறிவார்ந்த விநியோகப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இங்குள்ள சமூகத் தோட்டத்தில் உண்ணக்கூடிய செடிகள், பழமரங்களைக் குடியிருப்பாளர்கள் வளர்க்கலாம். பல்புலன் சார்ந்த தோட்டம், மனதை அமைதிப்படுத்தும் தோட்டம் போன்றவையும் அமைக்கப்படவுள்ளன.
இயூ டீ கடைத்தொகுதிக்கு எதிரே இந்த ஒருங்கிணைந்த வீவக திட்டம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அட்மிரல்டி, புக்கிட் பாத்தோக் வட்டாரங்களை அடுத்து மூத்தோருக்காக இயூ டீயில் இத்தகைய வீவக திட்டம் உருவாகியுள்ளது.