நூலக விரும்பிகளுக்கு சுவா சூ காங் பொது நூலகத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது. பிரம்மாண்டமாக, பசுமை அம்சங்களுடன் அடுத்த வியாழக்கிழமையன்று புதுப்பொலிவுடன் நூலகம் திறக்கவுள்ளது.
உட்புறத் தோட்டம், நீரில் வளரும் செடிகளைக் கொண்ட அறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கும் நீடித்த நிலைத்தன்மை வாழ்வுக்கும் உதவும் புதிய மின்னிலக்கக் கற்றல் வளங்கள் போன்றவற்றை இந்நூலகத்தில் காணலாம்.
'இயற்கையுடன் மீண்டும் இணைவோம்' என்ற கருப்பொருளில் அடுத்த தலைமுறை நூலகமாக இது விளங்கும் என்று கூறப்பட்டது. சமூகத்தின் தேவைகளையும் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு நூலகம் மறுவடிவமைக்கப்பட்டுள்ளதாக தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எங் செர் போங் கூறினார். மாற்றி அமைக்கப்பட்டுள்ள நூலக வளாகத்தில், மக்கள் உறவாடி, கற்றலில் ஈடுபட்டு, இயற்கை மற்றும் நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வர் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ஆறு கூடைப்பந்துக் கூடங்களின் அளவில் இருக்கும் நூலகம், சுவா சூ காங்கிலுள்ள லாட் 1 கடைத்தொகுதியின் இரு மாடிகளில் அமைந்திருக்கும்.
ஆறு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், தங்கள் பிள்ளைகளுடன் பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடும் நோக்கில் மேல்மாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.