மதுரை: யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் முக்கியம். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது அதிமுக தலைமையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேசமயத்தில், "இரட்டைத் தலைமையின் கீழ் கழகம் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது," என்றும் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறினார்.
இந்நிலையில், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று கூறியவரே ஓபிஎஸ்தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று கூறியவரே ஓபிஎஸ்தான்.
"சசிகலாவுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என்றும் கூறினார்.
"சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவை நீக்கியது பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு," என்றும் அவர் சொன்னார்.