செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையம் ஒன்று அதன் பராமரிப்பில் உள்ள நாயைத் தொல்லைப்
படுத்தியதன் தொடர்பில் புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
பராமரிப்பாளர் ஒருவர் அந்த பழுப்பு நாயை அடிப்பதையும் அதன் கழுத்தை நெரிப்பதையும் காட்டு காணொளிப் படம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. சனிக்கிழமை (அக்டோபர் 23) மாலை 6.26 மணிக்கு அந்தத் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றதாக காணொளியின் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தேசிய பூங்கா வாரியத்தின் கீழ் செயல்படும் விலங்கு மற்றும் கால்நடைப் பராமரிப்பு சேவை நிலையம் விசாரித்து வருவதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, வாரியத்தின் சமூக விலங்குப் பராமரிப்புப் பிரிவின் இயக்குநர் திருவாட்டி ஜெசிகா குவோக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"விலங்கு துன்புறுத்தல் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் எல்லாக் கருத்துரைப்புகளும் கடுமையானவையாகக் கருதப்படும்," என்றார் அவர்.
இதற்கிடையே, சிராங்கூன் வட்டாரத்தில் செயல்படும் 'த ஃபர் ரூம்' எனப்படும் செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் அந்நிலையத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவேற்றி உள்ளார்.
சம்பவம் குறித்து வருத்தமடைவதாகவும் நாயின் உரிமையாளரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.