கொவிட்-19 நெருக்கடிநிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பிலிப்பீன்ஸில் விற்பனை செய்யப்பட்ட மருத்துவச் சாதனங்களின் விலையை அதிக அளவில் உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் வர்த்தகர் மீது பிலிப்பீன்ஸ் செனட் சபை குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஃபார்மலி மருந்தியல் நிறுவனத்தின் தலைவரான 31 வயது திரு ஹுவாங் சூ யெனிடம் (படம்) பிலிப்பீன்ஸ் செனட் சபையின் நீல நாடா குழு
விசாரணை நடத்தி வருகிறது.
ஃபார்மலி மருந்தியல் நிறுவனத்துக்கும் பிலிப்பீன்ஸின் சுகாதாரத்துறை, கொள்முதல் சேவைத் துறை ஆகியவற்றுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் தொடர்பாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
ஃபார்மலி மருந்தியல் நிறுவனம் அதிக அளவிலான ஊசிகளையும் இதர மருத்துவச் சாதனங்களையும் ஆசியான், ஆசிய பசிஃபிக் நாடு
களுக்கு விற்னை செய்து வருவதாக இணையம் மூலம் தகவல் கிடைத்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. அந்நிறுவனத்துக்கும் தைவானில் அலுவலகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உலக நாடுகளை கொவிட்-19 உலுக்கியபோது ஃபார்மலி மருந்தியல் நிறுவனத்திடமிருந்து பிலிப்பீன்ஸ் அரசாங்கம் பரிசோதனைக் கருவிகள், முகக்கவசம் போன்ற சாதனங்களை வாங்கியது.
ஃபார்மலி மருந்தியல் நிறுவனம் பிலிப்பீன்ஸில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்துகொண்டது. வெறும் $16,500 மூலதனத்துடன் பிலிப்பீன்ஸில் தொழிலைத் தொடங்கிய ஃபார்மலி, $291 மில்லியன் பெறுமானமுள்ள 13 அரசாங்க ஒப்பந்தங்களைக் கைப்பற்றியது.