நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த 'தேவி' படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரபுதேவா தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக புதிய, இளம் இயக்குநர் களிடம் கதை கேட்கும் படலம் நடந்து வருகிறது. இந்நிலையில், 2014ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுன், தற்போது நகைச்சுவையை மையமாகக் கொண்ட கதையை உருவாக்கியுள்ளார்.
அந்தக் கதையைக் கேட்டு அதில் நடிக்க ஆர்வமாக ஒப்புக் கொண்டுள்ளாராம் பிரபுதேவா. 'மெட்ராஸ்', 'கதகளி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த கேத்ரீன் தெரசா, இப்படத்திலும் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு 'யங் மங் சங்' என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.