திருவனந்தபுரம்: கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மழை பாதிப்பு நீடித்து வருகிறது. கேரளாவில் மழை இன்னும் ஓயவில்லை. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரபிக்கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து கேரளாவில் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்புதிய காற்றழுத்தம் மிக விரைவில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நவம்பர் 25ஆம் தேதி வரை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம், கொல்லம், மலையோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திராவில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகே ராயலசெருவு ஏரிக்கரையில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, கரையோரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் துரித கதியில் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.
இந்த ஏரியின் கரையில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் திருப்பதி பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். காளஹஸ்தியில் 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதத்தில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 24 பேர் இறந்துவிட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.