சென்னை: கடந்த மூன்று நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் தலைநகர் சென்னையின் முக்கிய பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கி உள்ளனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் கொண்ட சென்னை மாநகரில், தாழ்வான பகுதிகளில் உள்ள 500 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அத்துடன், ஆயிரக்கணக்கான வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது.
இந்நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் போலிசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளதால், வடிகால்களை முறையாகப் பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
ரங்கராஜபுரம், தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இப்பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.
"800 மோட்டாா் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். மழையை எதிா்கொள்ளத் தயாா் நிலையில் உள்ளோம்," என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை இன்றோ, அல்லது நாளையோ முழுமையாக அகற்றிவிடுவோம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
"காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையால் 830 ஏரிகள் நிரம்பி உள்ளன. இங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
"நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் 2,205 குடிசைகள், 273 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி 244 கால்நடைகள் உயிரிழந்துள்ளன," என்றார் அமைச்சர்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட 12 கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு தினங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தை உட்பட ஐவர் பலி
நெல்லை மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்ததில் 3 வயது குழந்தை அருள்பேபியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு முதியோர்களும் பலியானார்கள். கணேசன், 65, மின்னல் தாக்கி உயிரிழந்தார். குடியாத்தத்தில் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுத்த ரமேஷ், 50, என்ப வர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்
கிராம மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் அருகே தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் வசிக்கும் 1,000க்கும் மேலான குடும்பத்தினர் தங்கள் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை அகற்றக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.