ஹெலிகாப்டர் மலர் தூவ, குதிரைகள் அணிவகுக்க மலேசியாவின் ஈப்போ நகரில் நடந்த அமரர் திரு வி.கே.கல்யாணசுந்தரத்தின் மனைவியின் இறுதி ஊர்வலத்தில் கொவிட்-19 பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து மலேசிய போலிசார் விசாரணை செய்கின்றனர்.
93 வயதான அம்மணியம்மாள் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது.
தமிழகம் திருவாரூரைச் சேர்ந்த வீரபத்திரன் கிருஷ்ணன் கல்யாணசுந்தரம், துணிக்கடை உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டவர்.சிங்கப்பூர், மலேசியா, தமிழகத்தில்பிரபலமாக விளங்கிய வி.கே.கல்யாணசுந்தரம் அண்ட் சன்ஸ், 1990களில் சிங்கப்பூரில் இருந்த தனது கடையை மூடியது. தற்போது பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் இக்கடை செயல்படுகிறது.
வாத்திய இசையுடன் செல்லும் திருவாட்டி அம்மணியம்மாளின் இறுதி ஊர்வலக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது. இறந்தவரின் வீட்டிலிருந்து அடக்கம் செய்யும் இடம்வரையில் சிலர் குதிரைகளில் அணிவகுத்துச் சென்றனர். இதுபற்றி போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக பேராக் மாநிலப் போலிஸ் தலைவர் மியோர் ஃபாரிடாலத்ராஷ் வாஹிட் மலேசிய ஊடகத்திடம் கூறினார்.
"ஊர்வலத்துக்கும் ஹெலிகாப்டர் பறக்கவும் அனுமதி பெறப்பட்டதா என்பது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மலேசிய தேசிய பாதுகாப்பு மன்ற விதிமுறைகளின்படி, அணிவகுப்பு, ஊர்வலத்துக்கு குறிப்பாக இறுதிச் சடங்கு ஊர்வலத்துக்கு அனுமதியில்லை," என்றார் அவர்.