உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவைவிட கிட்டத்தட்ட இரட்டிப்பு அளவு உப்பை சிங்கப்பூரர்கள் உட்கொண்டு வருகின்றனர்.
இதனால் அதிகமானோருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் இன்னும் அதிகமான உப்பை உட்கொள்வோர் எண்ணிக்கை மேலும் கூடியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒருவர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 2,000 மிலிகிராம் அளவு சோடியம் அல்லது உப்பை உட்கொள்ளவேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையாகும்.
ஆனால் சிங்கப்பூரில் உள்ளவர்கள் 2018ஆம் ஆண்டு நாளுக்கு சராசரியாக 3,600 மிலிகிராம் அளவிலான உப்பு உள்கொண்டனர் என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கணக்கெடுப்பு கூறியுள்ளது.
மேலும், பத்து பேரில் ஒன்பது பேர், தினசரி உச்சவரம்புக்கும் அதிகமாக உப்பை உட்கொண்டனர்.
இதே நேரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் 2020 மார்ச் மாதம் வரை 35.5 விழுக்காட்டு மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒப்புநோக்க, 2017இல் அந்த விகிதம் 24.2 விழுக்காடாக இருந்தது என்று கணக்கெடுப்பு கூறியது.
அதிக உப்பை உட்கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் சாத்தியம் அதிகமாகிறது.
கடந்த ஆண்டு தொடங்கிய நோய்ப்பரவல் சூழலை ஏற்பட்ட கோபத்தையும் வருத்தத்தையும் சமாளிக்க சிலர் உப்பு அதிகமுள்ள உணவுகளை நாடியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறினர்.
மேலும் சிலர், நேரத்தை மிச்சப்படுத்த அவசர உணவுகளை நாடக்கூடும் என்று ஹெல்திஃபைமீ (HealthifyMe) இணையத்தளத்தின் சத்துணவுப் பிரிவுத் தலைவர் மெலனி அந்தோனிசாமி கூறினார்.
இதனால் உப்பு அதிகம் உள்ள உடனடி நூடல்ஸ், சூப்கள், பொரிக்கும் உணவுகளை அவர்கள் தெரிவுசெய்யக்கூடும் என்றார் திருவாட்டி மெலனி.
இத்துடன், கடந்த ஓராண்டில் தனது நோயாளிகளில் சிலரது எடை கூடியிருப்பதாக ஹார்லி ஸ்த்ரீட் இதயசிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த நிபுணர் டாக்டர் மைக்கேல் மெக்டானல்ட் கூறினார்.
அதிக உடற்பயிற்சி இல்லாததும் துரித உணவுகளைச் சாப்பிடுவதும் அதற்கு முக்கிய காரணம்.