ஓமிக்ரான் பரவலால் மீண்டும் பல நாடுகள் தங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளை மாற்றி வருவதைத் தொடர்ந்து, விமானப் பயணங்களை ரத்து செய்ய அல்லது தள்ளிப் போட விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தடுப்பூசிப் பயணப் பாதைகளின்கீழ் உள்ள விமான டக்கெட்டுகளின் விற்பனை கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று சிங்கப்பூர் முன்னதாக அறிவித்தது.
இதனால் பயணங்களை ரத்து செய்ய அல்லது தள்ளிப் போட கோரிக்கை விடுத்து தங்கள் தொலைபேசி சேவைகளுக்கு அழைப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக எஸ்ஐஏ, ஸ்கூட் விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.
அவ்வாறு அழைப்பவர்கள் டிக்கெட் முன்பதிவு, எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விகளையும் கேட்கின்றனர்.
அத்துடன் ஐயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் உள்ள எஸ்ஐஏ நிறுவன சேவை நிலையத்தில், நீண்ட வரிசைகளில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
எஸ்ஐஏ வாடிக்கையாளர் சேவை தொலைபேசியை தொடர்புகொள்ள முயன்று ஆறு மணிநேரம் தொடர்பிலேயே காத்திருந்தார் ஜேசன் ஹுவாங் என்ற ஒரு வாடிக்கையாளர்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்கான விமான டிக்கெட்டை அவர் ரத்து செய்ய விரும்பினார்.
அவர் பயணம் செய்யவிருந்த விமானம் வந்துபோனது.
ஆனால் அவரது கேள்விக்கு மூன்று வாரம் கழித்துதான் பதில் வந்தது.
தமது விமான டிக்கெட்டை வேறு தேதிக்கும் வேறு நாட்டுக்கும் மாற்றிவிட 38 வயது லுக்மான் ஹுசேன் தொலைபேசி தொடர்பில் மூன்று மணி நேரம் காத்திருந்தார்.
ஓமிக்ரான் அச்சத்தாலும், வெளிநாட்டில் இருக்கும்போது தனிமைக்காப்பில் இருக்க வேண்டுமா, விடுப்பை நீட்டிக்க வேண்டியிருக்குமா என்பது போன்ற சந்தேகங்களால் அவர் தமது விடுமுறையைத் தள்ளிப் போட்டார்.
ஒப்புநோக்க, எஸ்ஐஏ நிறுவனத்தின் சேவையைப் பெற முன்பெல்லாம் அவர் 10 முதல் 30 நிமிடங்கள்தான் காத்திருக்க வேண்டியிருந்தது என்றார் லுக்மான்.
வாடிக்கையாளராக தமது அனுபவம் சற்று கசந்தபோதும், வருங்காலத்தில் எஸ்ஐஏவின் சேவையைத் தொடரப்போவதாக அவர் கூறினார்.
இந்த நிலைமையைச் சமாளிக்க வாடிக்கையாளர் தொடர்பு நிலையங்களில் வளங்களை அதிகரித்துள்ளதாக எஸ்ஐஏ கூறியது.
இணையம் வழி முன்பதிவு மாற்றங்களைச் செய்யும் அது வாடிக்கையாளர்களை ஊக்குவித்துள்ளது.
இந்நிலையில் விமான டிக்கெட்டுகளை மாற்ற அனுமதிப்பதில் பயண முகமை நிறுவனங்கள் தற்போது அதிக நீக்குப்போக்குடன் நடந்துகொள்கின்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாட்டு மாற்றங்களால் பயணத்திட்டங்கள் பாதிக்கப்பட்டால், அவை பயணிகளுக்கு கட்டணத்தை திரும்ப வழங்குகின்றன அல்லது வேறு சலுகைகள் தருகின்றன.
ஆனால் கடைசி நேரத்தில் திட்டங்களை மாற்றும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று அவை எச்சரித்தன.
தற்போது வெளிநாட்டுப் பயணங்களில் குழப்பம் நிலவியபோதும், சீனப் புத்தாண்டு, மார்ச் ஒரு வார விடுமுறை ஆகியவற்றின்போது விமானப்பயணங்கள் சூடுபிடிக்கும் என்று பயண முகவர்கள் கூறுகின்றனர்.