அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் மெதுவாகப் பந்துவீசும் அணிகளுக்கு அந்த ஆட்டத்தின்போதே தண்டனை வழங்கும் முறையை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இப்போது, ஆட்டம் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட அணிகளுக்கு அபராதம் விதிப்பது போன்ற தண்டனை விதிப்புமுறை நடப்பில் இருந்து வருகிறது.
புதிய விதியின்படி, பந்துவீசும் அணி தனக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவதற்குள் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசத் தயாராக இருக்க வேண்டும். அத்தகையதொரு நிலையில் இல்லாவிடில், எஞ்சி இருக்கும் அனைத்து ஓவர்களுக்கும் ‘30 யார்டு’ வட்டத்திற்கு வெளியே ஒரு வீரரைக் குறைவாக நிறுத்த வேண்டியிருக்கும்.
இம்மாதம் 16ஆம் தேதி ஜமைக்காவில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதும் டி20 போட்டியில் இருந்து, ஆட்டத்தின்போதே தண்டனை வழங்கும் இப்புதிய விதி நடப்பிற்கு வரும்.
முன்னதாக, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ‘தி ஹண்ரெட்’ எனப்படும் இன்னிங்சிற்கு நூறு பந்துகள் போட்டிகளில் இப்புதிய விதிமுறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
ஆட்டத்தின்போது வழங்கப்படும் தண்டனையுடன் இப்போது நடப்பிலுள்ள தண்டனைகளும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு மாற்றமாக, டி20 போட்டிகளில் ஓர் இன்னிங்சின் நடுவே இரண்டரை நிமிட பான இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தொடர் தொடங்கும் முன்னரே அதில் பங்கேற்கும் நாடுகள் இதுகுறித்து உடன்பாடு செய்துகொள்ள வேண்டும்.