பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் பல நூறு பயணிகளுக்குக் கிருமித் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, கிருமிப் பரிசோதனைகளை நடத்திய தனியார் ஆய்வுக்கூடம் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து வந்த அந்த பயணிகள் பலரும் தங்களது கிருமிப் பரிசோதனை முடிவுகள் தவறு என்று கூறியதை அடுத்து, விசாரணை தொடங்கியது.
ஆய்வுக்கூடத்தின் பரிசோதனை முறையைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், சிலர் விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் செயல்படும் அந்த ஆய்வுக்கூடத்தின் சேவைகளை நிறுத்திவிட்டு வேறு ஆய்வுக்கூடத்தை நியமித்துள்ளது.
மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
டெல்லி ஆய்வுக்கூடத்தின் சேவைகளை டிசம்பர் 15ஆம் தேதி அன்றுதான் பயன்படுத்தத் தொடங்கியதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 6) அன்று இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் வந்திறங்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் 125 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது.
மறுநாள், ரோம் நகரிலிருந்து வந்த விமானத்திலிருந்து வந்த குறைந்தது 173 பயணிகளுக்குக் கிருமித் தொற்று இருந்ததாக பரிசோதனை முடிவுகள் காட்டின.