மருத்துவமனையில் சேர்க்கப்படும் சிறுவர்கள் அதிகரிப்பு
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் பலர் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரியவர்களைவிட சிறுவர்கள் அதிகம் என்றார் அவர்.
ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இணைப் பேராசிரியர் மாக் கூறினார். ஆனால் அதிக நாள்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலை, தீவிர சிகிச்சைக்கான தேவை ஆகியவை அவர்களுக்கு ஏற்படவில்லை என்றார் அவர். கடந்த ஆண்டு அக்டோபர் 1லிருந்து இம்மாதம் 16ஆம் தேதி வரை சிங்கப்பூரில் 12 வயதுக்கும் குறைவான 14,380 சிறுவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தரவுகள் தெரிவித்தன.
சீனப் புத்தாண்டு: அதிகபட்சம் ஐவர் ஒன்றுகூட அனுமதி
எதிர்வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு தற்போது நடப்பில் உள்ள கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஐவர் மட்டுமே ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று தெரிவித்தார்.