சென்னை: கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்போது மின் நுகர்வு அதிகமாகி உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
எனினும், மாநிலம் முழுவதும் மின் விநியோகம் எந்தவிதத் தடங்கலும் இன்றிச் சீராக உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவது போன்ற மாயத்தோற்றத்தை மக்களிடையே சில தரப்பினர் ஏற்படுத்துவதாக அமைச்சர் சாடினார்.
"மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
"கடந்த இரு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் மின்சார உள்கட்டமைப்பில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளன.
"இந்த நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் 26,300 விநியோக மின்மாற்றிகள், 13 ஆயிரம் கிலோ மீட்டர் நீள உயர் மின்னழுத்த மின்பாதை, 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீள தாழ்வழுத்த மின் பாதைகள் நிறுவப்படும்.
"இதனால் மின்பாதையில் ஏற்படும் இழப்பு கணிசமாக குறைக்கப்படும்," என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழகத்துக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை உள்ள நிலையில், ஒன்றிய அரசால் 50 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததாகக் சுட்டிக்காட்டிய அவர், தமிழக முதல்வர் மத்திய அரசை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் விளைவாக தற்போது 57 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு நிலக்கரி கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 8.7 விழுக்காடு அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காற்றாலை, சூரிய ஒளியின் மூலம் கிடைக்கப் பெறும் மின்சாரம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால், நிலக்கரி பயன்பாடு ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.