கியவ்: ருமேனியா உடனான உக்ரேனின் கடல் எல்லைக்கு அருகே உள்ள ஸ்னேக் தீவில் ரஷ்ய தளவாடக் கப்பல் ஒன்றை தான் சேதப்படுத்தியுள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது.
அதேவேளையில், மரியபோல் துறைமுக நகரில் உள்ள எஃகு ஆலையில் சிக்கிக்கொண்ட உக்ரேனிய ராணுவ வீரர்களைக் காப்பாற்றுமாறு அவர்களுடைய உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.
கருங்கடலில் உள்ள ஸ்னேக் தீவில் அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் சண்டை, மேற்கு கருங்கடல் கரையோரப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான யுத்தமாக மாறலாம் என்று தற்காப்பு அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யக் கப்பல் சேதப்படுத்தப்பட்டது குறித்து வெளியான தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. ரஷ்யத் தற்காப்பு அமைச்சு இதுகுறித்து கருத்துரைக்கவும் இல்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான மெக்சார் வழங்கிய துணைக்கோளப் படங்கள், ரஷ்யக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் பின்விளைவைக் காட்டின. ஸ்னேக் தீவிலுள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டதை அப்படங்கள் காட்டின.
உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ரஷ்யப் படைகளை உக்ரேன் வெளியேற்றியதால், போர்க்களத்தில் ரஷ்யாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கார்கிவ் நகருக்குக் கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பகுதி, உக்ரேனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கார்கிவ் அருகே போல்டவா, டெர்காக் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மரியபோல் நகரில் உள்ள எஃகு ஆலையில் சிக்கிக்கொண்ட உக்ரேனிய வீரர்களை விடுவிக்கக் கோரி அவர்களுடைய உறவினர்கள் தலைநகர் கியவ்வில் பேரணியாகச் சென்றனர். அந்த எஃகு ஆலையை ரஷ்யப் படைகள் இடைவிடாமல் தாக்கின.
இரு மாதங்களுக்கும் மேலாக மரியபோல் நகரை முற்றுகையிட்டு வந்துள்ள ரஷ்யப் படைகள், அந்த நகரை கிட்டத்தட்ட முழுமையாகத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன.