இப்போதுதான் தமிழ் சினிமா அசல் பிரச்சினைகளைப் பேசத் தொடங்கி உள்ளது என்றும் அந்த வகையில் தமது படம் பேசுபொருளாகி உள்ளது என்றும் சொல்கிறார் இயக்குநர் தீபக்.
துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பேசும் படமாக உருவாகி உள்ள 'விட்னஸ்' படத்தை தீபக் இயக்கி உள்ளார். இதன் ஒளிப்பதிவாளரும் இவர்தான்.
"மனத்தைப் பாதிக்காத எதையும் என்னால் தொட முடியாது. கலை என்பது மக்களுக்கு வேடிக்கை காட்டுவதல்ல. அதை மனமார உணர்ந்திருக்கிறேன்.
"எந்தப் படைப்பை முதலாவதாக எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தபோது மனத்திற்குள் வந்தது துப்புரவுத் தொழிலாளர்கள்தான். நாம் நாகரிகத்தின் மேலான பூச்சில் வாழ்கிறோம் என்பதை இவர்களின் வாழ்க்கையை அறிய முற்பட்டபோது உணர்ந்தேன்," என்கிறார் தீபக்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படத்தின் திரைக்கதையைச் செதுக்குவதற்காக அதிகம் மெனக்கெட்டதாகச் சொல்பவர், மலக்குழியில் இறங்குவதால் மரணிக்கும் மனிதர்களைப் பற்றி விரிவாகப் பேசும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
"தமிழகத்தில் மலக்குழியில் இறக்கும் மனிதர்களின் மரணம் எவரையும் எதையும் தொந்தரவு செய்யவே இல்லையா என்ற நினைப்பே அவர்களின் மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவதாக இருக்கிறது. வாழ்வதற்கு வேறு தொழில் கிடைக்காமலேயே இந்த முடிவை நோக்கி அவர்கள் சென்றுவிடுகிறார்கள்.
"எனவே 'விட்னஸ்' மூலம் பேச வேண்டிய அரசியலைப் பேசிஇருக்கிறோம். அச்சமின்றி அதிகார அமைப்பை நோக்கி கேள்வி கேட்டிருக்கிறோம். பிரச்சினையின் ஆழம் வரை இந்தப் படம் செல்கிறது. மரணத்தின் கதவுகள் திறந்து வாழ்க்கையே தண்டனை ஆகிவிடுகிற அவர்கள் நிலைமையை நாம் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்," என்கிறார் தீபக்.
எளிய மக்களை அதிகாரம் என்ன செய்யும் என்பதையும் இப்படத்தில் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மகனின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடும் அம்மாவுக்கு நீதி கிடைத்ததா, நீதியைத் தடுக்கவும் நிறுத்தி வைக்கவும் என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதையும் அலசிஉள்ளதாகக் கூறுகிறார்.
"இது ஒரு முக்கியமான அரசியல். இதில் தன் மகனுக்காகப் பேசத் தொடங்கும் அம்மா ரோகிணி கடைசியில் சமுதாயத்திற்காகப் பேசத் தொடங்குகிறார்.
"அந்த மாற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும்," என்கிறார் தீபக்.