திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. அவர் தற்போது நடித்து வரும் படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே.சுரேஷும் ரூசோ என்ற புதுமுகமும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தமிழக காவல்துறை முன்னாள் உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி, திகில் படமாக இது உருவாகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு மத்தியில் கங்குலியும் ஐஸ்வர்யாவும் இது தொடர்பாக நேரில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது பட உருவாக்கம் குறித்த தனது திட்டத்தை ஐஸ்வர்யா விவரித்தாராம். கங்குலி அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பட அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரக்கூடும். ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரு முக்கிய பொறுப்புகளை ஏற்க இருப்பதால், புதுப்படங்களை ஒப்புக்கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளாராம் தனுஷ். தாம் இயக்கும் படம் வெளியீடு காண தயாரானதும் புது வாய்ப்புகளை ஏற்பாராம். தனுஷ் நடிப்பில் 'வாத்தி', 'திருச்சிற்றம்பலம்', 'தி கிரே மேன்' ஆங்கிலப்படம் ஆகியவை அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.