சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் தலைமை நிலைய மாநிலச் செயலர் பொறுப்பில் இருந்த இ.சரத்பாபு விலகிஉள்ளார். கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியில் ஈடுபாடு குறைந்ததுவிட்டது என்றும் அதுவே தமது விலகல் முடிவுக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற இரு உள்ளாட்சித் தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது என்று அறிக்கை ஒன்றில் சரத்பாபு குறிப்பிட்டுள்ளார்.
"கட்சித் தலைவர் இப்போது வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாகச் சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டுபோய்ச் சேர்க்கமுடியாது என்ற நிலையில், இக்கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன்," என்று சரத்பாபு தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் என்ற வகையில் கமல்ஹாசனின் கொள்கைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தாம் ஈடுபட்டிருந்த தாக அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி பத்மபிரியா, தலைமை நிலைய பொதுச்செயலராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போன்றோர் ஏற்கெனவே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்.