ஜெனிவா: குரங்கம்மை நிரந்தர நோயாக இல்லாத 27 நாடுகளில் இதுவரை 780 பேரிடம் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குரங்கம்மை தொடர்பிலான உலகளாவிய சுகாதார அபாய எச்சரிக்கை நிலை மிதமாக இருப்பதாக அது நேற்று கூறியது.
"மேலும் பல நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்படக்கூடும். இந்தக் கிருமி மேலும் பரவக்கூடும்," என்று அது சொன்னது.
குரங்கம்மை காரணமாக குறைவானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டது. ஐரோப்பா, வடஅமெரிக்கா போக, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, மொரோக்கோ, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.