ஆம்ஸ்டல்வீன் (நெதர்லாந்து): அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தனது சாதனையைத் தானே முறியடித்தது இங்கிலாந்து அணி.
மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி நெதர்லாந்து சென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணியில் ஃபில் சால்ட் (122), டேவிட் மலான் (125), ஜோஸ் பட்லர் (ஆட்டமிழக்காமல் 162) என மூவர் சதம் விளாச, அவ்வணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 498 ஓட்டங்களைக் குவித்தது.
ஒருநாள் போட்டி வரலாற்றில் ஓர் இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம் இதுதான். 2018ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 481 ஓட்டங்களை எடுத்ததே முன்னைய சாதனை. பட்லர் 47 பந்துகளில் நூறு ஓட்டங்களை எட்டினார்.
இப்போட்டியில் இங்கிலாந்து 26 சிக்சர்களை விளாசியதும் புதிய உலக சாதனை. அத்துடன், அவ்வணி 36 பவுண்டரிகளையும் அடித்தது. பவுண்டரி, சிக்சர் வகையில் மட்டும் முதன்முறையாக ஒரே இன்னிங்சில் 300 ஓட்டங்களுக்குமேல் எடுக்கப்பட்டது.
நெதர்லாந்து 266 ஓட்டங்களை மட்டும் எடுத்துப் படுதோல்வி அடைந்தது.