மும்பை: சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் நிதின் தேஷ்முக் (படம்), எங்களை வலுக்கட்டாயப்படுத்தி சூரத்துக்கு அழைத்துச் சென்றனர் என பரபரப்பாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, நான் தப்பியோட முயற்சி மேற்கொண்டேன்.
ஆனால், சூரத் காவல்துறையினர் என்னை பிடித்துக்கொண்டனர். நான் எவ்வகையிலும் நோய்வாய்ப்படவில்லை. இருந்தபோதும், நான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டேன் என்று மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியாக இருந்தது.
எங்களை 300க்கு மேற்பட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
எனக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அபித்கார் என்பவர் அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
சூரத் விடுதியை அடைந்தவுடன், மகாராஷ்டிர அரசுக்கு எதிரான சதித் திட்டம் நடைபெறுகிறது என எங்களுக்குத் தெரியவந்தது என்று தேஷ்முக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் பாலாபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் தேஷ்முக் செய்தியாளர் சந்திப்பின்போது, "தான் கடத்தலில் இருந்து தப்பிக்க நெடுஞ்சாலையில் நடந்துசென்றதாகவும், அப்போது சூரத் காவல்துறையினர் தன்னைப் பிடித்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
"ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட மற்றவர்கள் அனைவரும் மீண்டும் திரும்பி வருமாறு வேண்டுகிறேன். பாஜக உங்கள் மூலமாக சிவசேனா கட்சிக்கு எதிராகத் திட்டமிடுகிறது.
"அந்தத் திட்டத்திற்கு இரையாக வேண்டாம். உங்கள் அனைவருக்கும் அனைத்தையும் பாலாசாகிப், உத்தவ் ஜி, சிவசேனா ஆகியோர் மட்டுமே வழங்கியிருக்கிறார்கள்," என்றும் நிதிஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.