அப்பர் புக்கிட் தீமா சாலையை நோக்கிச் செல்லும் ஓல்டு ஜூரோங் சாலையில் நேற்று முன்தினம் லாரி ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 17 மற்றும் 23 வயது நிரம்பிய இளையர்கள் இருவர் உயிரிழந்தனர்.
மதுபோதையிலும் கவனக்குறைவுடனும் லாரியை ஓட்டி மரணம் விளைவித்ததாகக் கூறி, அதன் 25 வயது ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார்.
வாகனத்தின் முன்னிருக்கையில் சிக்கியிருந்த இருவர், நீரியல் கருவியின் துணைகொண்டு மீட்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த லாரி, ஒரு மரத்தின்மீது மோதியதாக நம்பப்படுகிறது. நிகழ்விடத்திலேயே இருவர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
லாரியின் ஓட்டுநரும் அதில் இருந்த 15 முதல் 20 வயதிற்குட்பட்ட மேலும் ஐந்து பயணிகளும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் எவரும் இவ்விபத்தில் சிக்கவில்லை என்று அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு, முதன்முறை எனில் $10,000 வரை அபராதமும் ஓராண்டுவரை சிறையும் விதிக்கப்படலாம். மீண்டும் அக்குற்றத்தைப் புரிந்தால் $20,000 வரை அபராதமும் ஈராண்டுவரை சிறையும் விதிக்கப்படலாம்.