ரத்த தானம் செய்யுமாறு கடந்த மாதம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பலர் ரத்த தானம் செய்தனர். இதனால் சிங்கப்பூரில் ரத்த இருப்பு ஓரளவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரத்த வகைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
அவர்களில் கிட்டத்தட்ட 21 விழுக்காட்டினர் முதல்முறையாக ரத்த தானம் செய்தனர். ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் இளையர்கள்.
கடந்த மாதம் ரத்த தானம் செய்த அனைவருக்கும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் நேற்று நன்றி தெரிவித்தன.
'ஏ+', 'ஓ+' ஆகிய ரத்த வகைகள் தேவைப்படுவதாகவும் அவ்வகை ரத்தம் கொண்டவர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கடந்த மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த ரத்த வகைகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு ரத்த வகைகளும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கடந்த மாதம் கூறியது.
வழக்கத்தைவிட ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும் கொவிட்-19 அலை காரணமாகவும் 'ஏ+', 'ஓ+' ரத்த வகைகளின் இருப்பு அதிக அளவில் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரத்த தானம் செய்தவர்களின் ஒருமைப்பாட்டு உணர்வு ஊக்க
மளிக்கும் வகையில் இருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாகியும் தலைமைச் செயலாளருமான திரு பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏறத்தாழ 400 யுனிட் ரத்தம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ரத்த இருப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய சீரான ரத்த தானம் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தானம் செய்யப்பட்ட ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் ஆறு வாரங்களுக்கும் 'பிளேட்லட்' அணுக்கள் ஏழு நாள்களுக்கும் பிறருக்குச் செலுத்தக்கூடிய நிலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டன.
எனவே, சிங்கப்பூரில் உள்ள நோயாளிகளுக்கு எப்போதும் போதுமான ரத்தம் இருப்பதை உறுதி செய்ய குறைந்தது ஓர் ஆண்டுக்கு இருமுறையாவது ரத்த தானம் செய்யவேணடும் என்று ரத்த தானம் செய்பவர்கள் கேட்டுக்கொள்ளப்
படுகின்றனர்.