சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் வளர்ப்புப் பெற்றோருக்கான நிதி ஆதரவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் அதிகமானோர் வளர்ப்புப் பெற்றோராக மாற ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வோருக்கான மாதாந்திர வளர்ப்பு உதவித்தொகை தற்போது 936 வெள்ளியாக உள்ளது. இது, செப்டம்பர் 1 முதல் 1,100 வெள்ளியாக உயரும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று கூறினார்.
அதேபோல சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்ப்போருக்கான மாதாந்திர உதவித்தொகை 1,114 வெள்ளியிலிருந்து 1,500ஆக உயரும்.
சிகிச்சை மற்றும் போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிக்க அவர்களுக்கு இந்தக் கூடுதல் தொகை கைகொடுக்கும். உதவித்தொகை கூடுதவதால் அமைச்சின் செலவு ஆண்டுக்கு $1.5 மில்லியன் கூடும் என்றார் திரு மசகோஸ்.
சிங்கப்பூரில் தற்போது 550 வளர்ப்புப் பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 20 விழுக்காட்டினர் சிறப்புத் தேவை உடைய பிள்ளைகள்.
உதவித்தொகையை உயர்த்துவது என்பது வளர்ப்புக் குடும்பங்
களையும் வளர்ப்புப் பிள்ளைகளையும் ஆதரிக்க தமது அமைச்சு வகுத்திருக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.
லெங்கோக் பாருவில் உள்ள எனேபிளிங் வில்லேஜ் கூடத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நேரடியாகப் பங்கேற்று திரு மசகோஸ் பேசினார். கிட்டத்தட்ட 170 பேர் இதில் பங்கேற்றனர்.
"குழந்தைப் பராமரிப்பு, ஆரம்பகாலப் பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் போன்றவற்றுக்காக வளர்ப்புக் குடும்பங்கள் உதவிபெற்று வருகின்றன. குழந்தைப் பராமரிப்பு விடுப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றுடன், சமூக ஊழியர்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
"வளர்ப்புப் பெற்றோர் தாங்கள் வளர்க்கும் பிள்ளைகளைப் பராமரிக்க மிதமிஞ்சிய ஆதரவை வழங்குகிறார்கள்.
"2020ஆம் ஆண்டு 564 ஆக இருந்த வளர்ப்புக் குடும்பங்கள் கடந்த ஆண்டு 595 ஆக அதிகரித்தன. இது மகிழ்ச்சிக்குரிய அம்சம். மேலும் அதிகமான பிள்ளைகள் குடும்ப அரவணைப்புடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது," என்றார் அமைச்சர் மசகோஸ்.
இயன் மருத்துவரான இம்ரான் முகமது காமிசும் அவரது மனைவி ஃபைஸா முகம்மதுவும் மதி இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தை ஒன்றை வளர்க்கிறார்கள்.
கூடுதல் உதவித்தொகை பிள்ளைகளை வளர்க்க ஆகும் செலவுகளைக் குறைக்க உதவும் என்று திருமதி ஃபைஸா கூறினார்.
அதேபோல திரு சிவச்சந்திரன் டி. பழனிச்சாமி, 62, அவரது மனைவி அனிதா என். சிவதாசன், 60, ஆகியோர் 2003ஆம் ஆண்டிலிருந்து 20 குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறார்கள். அவர்களில், குறைபாடுடைய 12 வயது மற்றும் 18 வயது ஆன இரு பிள்ளைகளை தற்போது வளர்த்து வருகிறார்கள். இந்தத் தம்பதிக்கு 25, 28 வயதுகளில் சொந்த மகன், மகள் உண்டு.
மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனைக்காக பிள்ளைகளை டாக்சி மூலம் அழைத்துச் செல்வதால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் உதவித்தொகை இந்தப் போக்குவரத்துச் செலவைச் சமாளிக்க பெரிதும் உதவும் என்று திருமதி அனிதா கூறினார்.