பிரதமர் லீ சியன் லூங் (படம்) வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய தினப் பேரணி உரையை ஆற்றவிருக்கிறார்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமையகத்தில் அவர் உரையாற்றுவார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறே முக்கால் மணிக்குப் பிரதமர் மலாய் மொழியில் தேசிய தினப் பேரணி உரையைத் தொடங்குவார். இரவு ஏழு மணியிலிருந்து மாண்டரின் மொழியில் அவர் தமது உரையைத் தொடர்வார். இரவு எட்டு மணியில் இருந்து திரு லீ ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். பிரதமர் அலுவலகம் நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்டது.
மிக முக்கியமான அரசியல் உரையாகக் கருதப்படும் தேசிய தினப் பேரணி உரையில் நாட்டின் கொள்கை மாற்றங்கள், சிங்கப்பூரின் வருங்கால இலக்குகள் ஆகியவை குறித்துப் பேசப்படுவது வழக்கம்.
இம்மாதம் 8ஆம் தேதி விடுத்த தேசிய தினச் செய்தியில் அமெரிக்க-சீன உறவுகள், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு போன்ற அரசியல் சூழல்கள் சிங்கப்பூரில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார்.
பொருளியல் சவால்கள் பற்றியும் பொருளியல் முன்னேற்றம், சமூக மீள்திறன் ஆகியவை தொடர்பான நீண்டகாலத் திட்டமிடல் குறித்தும் தமது தேசிய தினப் பேரணி உரையில் பேசவிருப்பதாகவும் திரு லீ தேசிய தினச் செய்தில் கோடிகாட்டியிருந்தார்.
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி ஒளிவழிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் ஒளிவழியிலும் பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம், அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான 'ரீச்'சின் ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றிலும் அது நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அத்துடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணையத்தளம், ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் ஒளிவழி ஆகியவற்றிலும் பிரதமரின் உரை நேரலையாக ஒளிபரப்பாகும்.