ஆசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான டிபிஎஸ்ஸின் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தாவுக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து அவர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) தலைவராக செயல்படுவார். அப்பொறுப்பில் உள்ள ஹோ குவான் பிங் அதே நாளில் பதவி விலகுகிறார்.
எஸ்எம்யுவை சிங்கப்பூரின் 3வது பல்லைக்கழகமாக உருவாக் கும் முயற்சியில் தலைவர் பொறுப்பை ஏற்க திரு ஹோவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
இதனை ஏற்றுக்கொண்ட அவர் எஸ்எம்யுவை பல்கலைக்கழகப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
திரு ஹோவும் முன்னாள் துணைப் பிரதமர் டோனி டானும் பல்கலைக்கழகமாக மாறுவதற்கான அடிப்படை அம்சங்களைப் புகுத்தியதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் எஸ்எம்யு தெரிவித்தது.
நிர்வாகத்தை வலுப்படுத்தியது, சமூக அறிவியல் பாடங்களை வழங்கியது, மாணவர்களுக்கு பரந்த அளவிலான கல்வியை வழங்கியது ஆகியவை அவற்றில் குறிப்பிடத் தக்கவை.
பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் வார்ட்டன் பள்ளி போன்ற பாடத்திட்டங்களையும் கலந்துரையாடலை உள்ளடக்கிய வகுப்பறைகளையும் கொண்ட அமெிக்கக் கல்வி நிலையங்களின் பாணியில் சிங்கப்பூரின் முதல் பல்கலைக்கழகமாக 2000ஆம் ஆண்டில் எஸ்எம்யு உருவானது.
முதல் தொகுதியில் 306 மாண வர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் இன்று 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் படித்து வருகின்றனர். ஏறக்குறைய 36,000 பேர் அதன் முன்னாள் மாணவர்களாக உள்ளனர்.
பன்யான் ட்ரி ஹோல்டிங்ஸ், லகுனா ரிசோர்ட்ஸ் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான திரு ஹோவுக்கு அவரது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் 2009ஆம் ஆண்டில் மெச்சத்தக்க விருது வழங்கப்பட்டது,
2017ல் தேசிய நாள் விருதுகளில் நாட்டின் உயரிய மதிப்புக்க தனிச்சிறந்த சேவை விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.
"எஸ்எம்யுவை ஒரு வர்த்தகப் பள்ளிக்கு மேலாக திரு ஹோ உயர்த்திக்காட்டியுள்ளார்.
அவரது தலைமையில் வர்த்கப் பள்ளியாக மட்டுமே இருந்த அது, பல்கலைக்கழகமாக உருமாறியது. தற்போது கணினியியல், தகவல் அமைப்பு, பொருளியல், சட்டம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய வற்றை உள்ளடக்கி எட்டு பள்ளிகள் அதில் செயல்படுகின்றன," என்று தனது அறிக்கையில் எஸ்எம்யு குறிப்பிட்டது.