கிறைஸ்ட்சர்ச்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்றைய தினத்தில் நியூசிலாந்து அணித் தலைவர் மெக்கல்லம் (படம்) இறுதி முறையாகப் பந்தடித்து, ஆட்டமிழந்து மைதானத்தைவிட்டு வெளியேறினார். அரங்கில் கூடியிருந்த நியூசிலாந்து ரசிகர்கள் கரவொலி எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர். அண்மையில் 54 பந்துகளில் சதம் அடித்து ஆக விரைவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்த மெக்கல்லம் இம்முறை 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நேற்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பந்தடிப்பைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணி 153.1 ஓவர்களில் 505 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இது நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை யைவிட 135 அதிகம். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஜோ பர்ன்ஸ் 170 ஓட்டங்களும் அணித் தலைவர் ஸ்மித் 138 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். நேற்று பந்தடித்த ஆடம் வோஜஸ் 60 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்தின் வாக்னர் 106 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 135 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.
பேட்டின்சனின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி திணறியது. 72 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது. மார்ட்டின் கப்டில் (0), டாம் லேதம் (39), நிக்கல்ஸ் (2) ஆகியோர் பேட்டின்சன் பந்தில் நடையைக் கட்டினர். நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்களைச் சேர்த்தது. இதன் மூலம் ஆறு விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அந்த அணி 14 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.