உள்ளூர் சமய வழிபாட்டு இடங்களைப் பார்க்கும் மெய்நிகர் சுற்றுலாக்கள், இசை மூலம் இனம், சமயம் சார்ந்த சமூக கதைகளைச் சொல்லும் சமயங்களுக்கிடையிலான விழா, சமயம் தொடர்பான உரையாடல்களுக்கு வழிவகுக்கும் சீட்டுக்கட்டு விளையாட்டு முதலிய இளையர்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் இளைய தலைவர்கள் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டன.
இளம் உள்ளூர் மற்றும் அனைத்துலக தலைவர்கள் ஒன்று சேர்ந்து சமூக ஒற்றுமையைப் பலப்படுத்தும் வழிகளை ஆராயும் நிகழ்ச்சிதான் இளைய தலைவர்கள் மாநாடு.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவில் எஸ். ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்த ஒற்றுமையான சமூகங்களுக்கான அனைத்துலக மாநாட்டின் ஓர் அங்கம் இளைய தலைவர்கள் மாநாடு.
மாநாட்டை முடித்துவைத்து பேசிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்லின் டோங், இளைய சமூக வெற்றியாளர்களைக் கொண்ட ஒரு வலுவான சமுதாயத்தை அமைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
செவ்வாய்க்கிழமையன்று காணொளி வழி சிறப்புரை ஆற்றிய புனித வத்திகன் நகரின் வெளியுறவு அமைச்சர் கார்டினல் பியேட்ரோ பரோலினின் உரையை மேற்கோள்காட்டி பேசிய திரு டோங், நீதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இளம் தலைவர்களை வளர்ப்பது ஒரு மேம்பட்ட சமூகத்துக்கு ஆணிவேராக இருக்கும் என்றார்.
இவ்வாண்டின் இளைய தலைவர்கள் மாநாட்டில் 120 இளம் தலைவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் முன்மொழிந்த சில திட்டங்களுக்கு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு நிதியாதரவு அளிக்கும்.
மேலும் இளைய தலைவர்கள் மாநாட்டின் முன்னாள் உறுப்பினர் சங்கத்தை வளப்படுத்துவதற்கும் மெய்நிகர் அளவில் பங்காளித்துவத்தை மேம்படுத்தி அதன் மூலம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வளத்தை உருவாக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.