குறுக்குத் தீவு ரயில்பாதையின் இரண்டாம் கட்டம் 2032ஆம் ஆண்டு திறக்கப்படும்போது டர்ஃப் சிட்டியில் இருந்து ஜூரோங் லேக் வட்டாரம் வரை ஆறு ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன.
இவற்றில் டௌன்டவுன் பாதையில் உள்ள கிங் ஆல்பர்ட் பார்க் நிலையத்திலும் கிழக்கு மேற்கு ரயில்தடத்தில் உள்ள கிளமெண்டி நிலையத்திலும் முனையங்கள் அமையும்.
மொத்தம் 15 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதையின் எஞ்சிய இரண்டு நிலையங்கள், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அருகே அமையும் மாஜு, வெஸ்ட் கோஸ்ட் ஆகியவை.
இரண்டாம் கட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்பாதையின் முதல் கட்டத்தில் சாங்கி ஏவியேஷன் பார்க் முதல் சின் மிங்கின் பிரைட் ஹில் வரை 12 ரயில் நிலையங்கள் அமைந்திருக்கும். இது 2030ஆம் ஆண்டு திறக்கப்படும்.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து நேற்று அறிவித்தார்.
ஜூரோங் லேக் வட்டாரம், வெஸ்ட் கோஸ்ட் போன்றவற்றுக்கும் கிழக்கு, மேற்கு, வடகிழக்குப் பகுதிகளுக்கும் இடையே தொடர்பை மேம்படுத்த இது உதவும் என்றார் அவர்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்ட நிலையங்கள் சேவை வழங்கத் தொடங்கிய பிறகு 40,000 குடும்பங்கள் அதனால் பலனடையும். பயண நேரம் இந்தச் சேவையின் மூலம் குறையும் என்பதையும் அமைச்சர் சுட்டினார்.
எடுத்துக்காட்டாக ஹவ்காங்கிலிருந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு 35 நிமிடங்களில் செல்லலாம்; தற்போது இதற்கு பேருந்திலும் ரயிலிலும் செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும்.
மேலும் செய்தி 2ஆம் பக்கம்