ஹைதராபாத்: ஒரு கோடி பெண்களுக்கு இலவசப் புடவை வழங்கும் நடவடிக்கை தெலுங்கானாவில் நேற்று தொடங்கியது.
ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை வேளையில் தெலுங்கானா மக்கள், பதுகம்மா என்ற பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
இது திருமணமான பெண்கள் தாய் வீட்டுக்குத் திரும்பி வருவதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இச்சமயம் புடவையுடன் மேலும் சில பொருள்கள் சீர்வரிசையாகப் பெண்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வராகப் பொறுப்பேற்ற சந்திரசேகர ராவ், பதுகம்மா பண்டிகையின்போது, அம்மாநில பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு அறிவித்தார்.
அதன்படி, நேற்று முதல் இலவச சேவைகளின் விநியோகம் தொடங்கியது என்றும் நெசவாளர்களை ஆதரிப்பதையும் பெண்களுக்கு ஒரு சிறிய பரிசு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெலுங்கானா ஜவுளி, கைத்தறித் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்தார்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர் என்றும் அரசின் இலவச சேலைத் திட்டத்தால் நெசவாளர்களின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், பதுகமம்மா சேலைகள் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக தெலுங்கானா அரசு நடப்பாண்டில், 339.73 கோடி ரூபாய் செலவிடுகிறது. மேலும் இந்த முறை பல்வேறு வண்ணங்கள், வடிவமைப்புகளுடன் அழகான புடவைகள் வழங்கப்படுகின்றன ," என்றார் அமைச்சர் ராமராவ்.