மிலான்: நடப்பு யூரோ கிண்ண வெற்றியாளரான இத்தாலியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றதால் ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் 'ஏ' லீக்கில் இருந்து வெளியேறி, ''பி' லீக்கிற்குத் தள்ளப்பட்டது இங்கிலாந்து அணி.
ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி ஆகிய குழுக்களுடன் 'ஏ' லீக்கின் 'ஏ3' பிரிவில் இங்கிலாந்து இடம்பெற்றுள்ளது. இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள அவ்வணி, ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அவ்வணி ஒரு கோலை மட்டுமே போட்டு, ரசிகர்களை ஏமாற்றியது.
வரும் நவம்பர் மாதம் கத்தாரில் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் இந்த மோசமான செயல்பாடு அதன் பயிற்றுவிப்பாளர் கேரத் சௌத்கேட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியின் தோல்விக்குத் தாம் பொறுப்பேற்றுக்கொள்வதாகக் கூறிய சௌத்கேட் தமது அணியால் கோலடிக்க முடியாததற்குக் காரணம் கூறுவது கடினம் என்று சொன்னார்.