அரசாங்கம், பொருள் சேவை வரி உயர்வின் பாரத்தைக் குறைப்பதற்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் 950,000 சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு மீண்டும் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுகளை வழங்குகிறது.
'யுசேவ்' மற்றும் சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளும் உள்ளடக்கிய பற்றுச்சீட்டு அக்டோபர் மாதம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
யுசேவ் பற்றுச்சீட்டுக்கான மதிப்பு $100 முதல் $190 வரை இருக்கும்.
சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் அரை மாதத்திலிருந்து ஒரு மாதம் வரை இருக்கும். கடந்த ஜூலையில் வழங்கப்பட்ட சலுகைகளைப் போல இம்முறையும் இருக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
தற்போதைய நிதியாண்டில் மூன்றாவது முறையாக பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் முறையாக பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
கடைசி தவணைப் பற்றுச்சீட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் விநியோகிக்கப்படுகிறது.
2022 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொருள், சேவை வரிக்கான நிரந்தரப் பற்றுச்சீட்டுத் திட்டம் மற்றும் குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
பொருள் சேவை வரி உயர்வையும் இதர வாழ்க்கைச் செலவுகளையும் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருமான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு பற்றுச்சீட்டு உதவும் என்று நிதி அமைச்சு சொன்னது.
மேம்பட்ட ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை மாதம் முதல் மூன்றரை மாதங்கள் வரையில் சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் கழிவு கிடைக்கும்.
சென்ற நிதியாண்டிலிருந்து இந்த நிதியாண்டு வரை யுசேவ் கழிவு இரண்டு மடங்காகியுள்ளது. இதன்படி ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளில் வசிக்கும் சராசரி சிங்கப்பூர் குடும்பங்களுக்கு எட்டு முதல் பத்து மாதங்கள் வரை பயனீட்டுக் கட்டணத்தில் சலுகை கிடைக்கும்.
இதுவே மூவறை அல்லது நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நான்கு முதல் ஆறு மாதம் வரையிலான கட்டணக் கழிவு இருக்கும்.
இந்த நிதியாண்டில் மட்டும் இவ்விரு சலுகைகளுக்காக அரசாங்கம் மொத்தம் 720 மில்லியன் வெள்ளியை செலவிடுகிறது. வீவக வீட்டைப் பொறுத்து ஒவ்வொரு குடும்பமும் $440 முதல் $760 வரை யுசேவ் கழிவு பெறுவார்கள்.
செப்டம்பரில் 1.2 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட $100 பயனீட்டு உதவித் தொகைக்கு மேலாக இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.