அருட்கொடை துறையில் பங்காளித்துவத்துக்கான புதிய கூட்டணி
அருட்கொடை தொடர்பான துறையில் பங்காளித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய கூட்டணி மூலம் 287 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.
பூமி தொடர்பான விவகாரங்கள், அமைதி, மக்கள், வளர்ச்சி ஆகிய அம்சங்கள் தொடர்பில் இது செயலாற்றும்.
தெமாசெக் அறக்கட்டளைத் தலைவர் ஹோ சிங் இதனைத் தெரிவித்தார்.
தெமாசெக் அறக்கட்டளை, தெமாசெக் அறநிறுவனம் ஆகியவை ஏற்பாடு செய்த அருட்கொடை தொடர்பான ஆசிய உச்சநிலை மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலில் நேற்று இந்த உச்சநிலை மாநாடு நடைபெற்றது.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய திருவாட்டி ஹோ, நல்ல பலன் தரக்கூடிய, மேலும் ஒத்துழைக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் புதிய கூட்டணி வழங்கும் என்றார்.
புதிய கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறநிறுவனம், டாலியோ ஃபிலாந்திரோபிஸ், லி கா ஷிங் அறநிறுவனம், டனோடோ அறநிறுவனம், சினார் மாஸ் அமைப்பின் நான்கு நிறுவனங்கள் ஆகியவை தலா 25 மில்லியன் டாலர் நிதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மற்ற பங்காளித்துவ நிறுவனங்களும் ஆதரவாளர்களும் ஒரு மில்லியன் டாலருக்கும் 10 மில்லியன் டாலருக்கும் இடைப்பட்ட தொகையை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளன.
தெமாசெக் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நிதியை வழங்க உறுதியளித்துள்ளதாகக் கூறிய திருவாட்டி ஹோ, இந்தக் கூட்டணியில் உலகப் பொருளியல் மன்றம் உத்திபூர்வப் பங்காளியாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.
வோங் பார்ட்னர்ஷிப், ஃபிரெஷ்ஃபீல்ட்ஸ் பிரக்காஸ் டெரிங்கெர் ஆகிய நிறுவனங்கள் இந்தக் கூட்டணியை அமைப்பதற்கான இலவச சட்டச் சேவையை வழங்கின.
அடுத்த ஒன்பது முதல் 12 மாதங்களில் இந்தக் கூட்டணி அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கும் என்றார் திருவாட்டி ஹோ.
வரும் மாதங்களில் கூடுதலான நிறுவனங்கள் இதில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியின் நலன், அமைதி, மக்கள், வளர்ச்சி ஆகிய நான்கும் லாபநோக்கமற்ற இந்தக் கூட்டணியின் முன்னுரிமைகள் என்று திருவாட்டி ஹோ குறிப்பிட்டார்.
இந்த நான்கின் வெற்றிக்கும் பங்காளித்துவம் மிக முக்கியம் என்றார் அவர்.
இந்த ஆண்டின் உச்சநிலை மாநாடு பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளும் நீடித்த நிலைத்தன்மை மிக்க சமுதாயமும், அனைவரையும் உள்ளடக்கிய கல்விமுறை, மீள்திறன் கொண்ட சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்துகிறது.
மாநாட்டில், வட்டார எரிபொருள் நிர்வாகம், பெருந்தொற்றுத் தயார்நிலை தொடர்பான திட்டம், உயிரியல்சார்ந்த எரிபொருள் திட்டம், பாலர் பருவ மேம்பாட்டுத் திட்டம், ஆசியான் நாடுகளின் குழந்தைகளுக்கான மரபியல் திட்டம், ஆசியாவில் உயர்கல்வி தொடர்பான திட்டம் என ஆறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.